இசை : | பாடல் : பாரதிதாசன் |
குரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் | வருடம் : ---- |
இயற்கைச் செல்வம்
விரிந்த வானே, வெளியே - எங்கும்
விளைந்த பொருளின் முதலே!
திரிந்த காற்றும், புனலும் - மண்ணும்
செந்தீ யாவும் தந்தோய்.
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே!
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!
அசைவைச் செய்தாய் ஆங்கே - ஒலியாம்
அலையைச் செய்தாய் நீயே!
நசையால் காணும் வண்ணம் - நிலமே
நான்காய் விரியச் செய்தாய்!
பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம்
பைந்தமிழ் பேசச் செய்தாய்!
இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,
ஏந்திழை இனிமைக் குரலால்!
எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்
எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் - எமையே
துய்க்கச் செய்தாய் அடடா!
கல்லா மயில், வான்கோழி - புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் `ஆடற் - கலை'தான்
அமையச் செய்தாய் வாழி!
No comments:
Post a Comment